'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்லிப்பூ' பாடலை மனதை மயக்குவதாக சீமான் சிலாகித்து பாராட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய அன்புத் தம்பி சிம்பு நடித்து, தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை எழுதி, பாடகி மதுஸ்ரீ இனிமையான குரலில் பாடியிருக்கின்ற 'மல்லிப்பூ' பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரைக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமானுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!
அக்கா தாமரை இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்ச கோதரன் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேசனுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!'' என தெரிவித்துள்ளார்.