தமிழ் சினிமா

“நந்தினி கதாபாத்திரம்... எனக்கு பொறாமையாக உள்ளது” - நடிகை மீனா

செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்' படத்தில் தன்னுடைய கனவுக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பது பொறாமையாக இருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

கல்கியின் வரலாற்று நாவலை தழுவி இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தில், நடிகர்கள், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, திரைக்கதையை மணிரத்னமும், குமரவேலும் இணைந்து எழுதியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை திரையரங்குகளில் பான் இந்தியா முறையில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியேஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவர் மீது பொறாமை கொள்கிறேன். ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக அவர் நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT