புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் - சமந்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் மித்ரனுக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஷால். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தனது நிறுவனம் மூலம் அப்படத்தை தயாரிக்கவும் இருக்கிறார்.
நாயகியாக சமந்தா, ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டராக ரூபன் என 'தெறி' படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இசையமைப்பாளராக யுவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கப்பட இருக்கிறது.
மேலும், இப்படத்துக்கு 'இரும்பு திரை' எனத் தலைப்பிடலாம் என்று ஆலோசித்து வருகிறது படக்குழு. மறைந்த சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்பு என்பதால் அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி வருகிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.