'போகன்' கதை உரிமை விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் சங்கம் தனது விளக்கத்தை அளித்துள்ளது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'போகன்'. பிரபுதேவா தயாரித்து வரும் இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது. தற்போது இறுதிகட்ட பணிகளை படக்குழு தீவிரப்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆண்டனி புகார் அளித்திருக்கிறார். அதில் "'போகன்' படத்தின் படப்பிடிப்புக்கு போவது முன்பாகவே நான் புகார் அளித்திருக்கிறேன். ஆனால், என்னிடம் விலை பேசினார்கள். நான் இக்கதையை படமாக்கிய போது, போதிய பணமின்றி நிறுத்தப்பட்டது. நான் 'அல்வா' என்று எழுதிய கதையைத் தான் 'போகன்' என்ற தலைப்பில் மாற்றி செய்திருக்கிறார்கள்" என பலதரப்புகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தது மட்டுமன்றி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக என்னை தாக்கிவிட்டார்கள் என்றும் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லட்சுமணும் புகார் தொடுத்துள்ளார்.
'போகன்' விவகாரம் தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்கம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பது:
"ஆண்டனி தாமஸ் என்பவர் 11.01.2016 அன்று தான் எங்கள் சங்கத்தில் உறுப்பினாராக இணைந்தார். உறுப்பினரான 2ம் நாளே 'அல்வா' என்ற தலைப்பில் ஆறு பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்தார். மீண்டும் 27.01.2016 அன்று அதே 'அல்வா' என்ற தலைப்பில் சற்று விரிவான அதிக பக்கங்கள் கொண்ட ஒரு கதையை பதிவு செய்தார்.
பின்பு தன் கதையை லட்சுமண் என்ற இயக்குநர் 'போகன்' என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார் என்ற புகாரை சங்கத்தில் பதிவு செய்து தனக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
எழுத்தாளர் சங்க விதிகளின்படி ஒருவர் உறுப்பினராகி 6 மாதங்கள் கழித்து தான் உறுப்பினரின் புகாரை நாங்கள் விசாரிக்க வேண்டும் என்பது விதி. இருந்தாலும் ஆண்டனி தாமஸ் சூழ்நிலையை கருதி அவர்மீது பரிதாபம் கொண்டு அவரது புகாரை 6 எழுத்தாளர்களைக் கொண்ட புகார் விசாரணைக் குழுவிற்கு அனுப்பி உண்மை என்ன என்று விசாரிக்க ஆவண செய்தோம்.
அதன்படி விசாரணைக் குழுவினர் உறுப்பினர் ஆண்டனி மற்றும் லட்சுமண் இருவரிடமும் தனித்தனியாக அவரவர் கதைகளை விளக்கமாக கேட்டு அறிந்தனர். நான்கு நாட்கள் கழித்து தங்களது அறிக்கையை எழுத்தாளர் சங்கத்தில் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் "இரண்டு கதைகளுக்கும் சில சில ஒற்றுமைகள் இருப்பதாக தெரிகிறது" என்று தெரிவித்தனர்.
அடுத்த 2 நாட்கள் கழித்து புகார் சம்பந்தப்பட்ட முடிவைத் தெரிந்து கொள்ள சங்கத்திற்கு ஆண்டனி தாமஸிடம் இரண்டு கதைகளுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக புகார் விசாரணைக்குழு தெரிவித்ததாக நாங்கள் தெரிவித்தோம். சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக லட்சுமணை விசாரித்து ஒரு வேளை இது உங்களின் கதை என்று நிரூபிக்கப்பட்டால் அதற்கு நிவாரணமாக தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, தனது பெயரை கதாசிரியர் என்று போட வேண்டும் என்றும், மொழிமாற்று உரிமை வேண்டும் என்றும், அதற்கு மேல் கதைக்கு சம்பளமாக 75 லட்சம் பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு நிர்வாகிகள் அனைவரும் கலந்து ஆலோசித்து முதல் 2 கோரிக்கைகளை ஒப்புக்கொண்டதுடன், 3வது கோரிக்கைக்கு அதிகபட்ச தொகையாக 10 லட்சம் வரை பேசிப் பார்க்கிறோம் என்று ஆண்டனி தாமஸிடம் தெரிவித்தோம்.
அடுத்த 2 நாட்கள் கழித்து ஆண்டனி தாமஸ் - லட்சுமண் இருவரையும் வரவழைத்துப் பேசிப் பார்த்தோம். அப்போது லட்சுமண், சில ஆங்கிலப்பட டிவிடிக்களை எங்களிடம் கொடுத்து இந்த படங்களையும், மேலும் சில படங்களையும் தழுவித்தான் என் கதையை நான் உருவாக்கினேன் என்று விளக்கமளித்தார். அதில் உள்ள ஆப்பிரிக்கன் படத்தின் மூலக்கதையும், இவர்கள் இருவர் சொன்ன கதையையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவருமே ஆப்பிரிக்க திரைப்பட கதையை தழுவித்தான் கதை எழுதியுள்ளார்கள் என்பதை அறிந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலும், இருவர் கதைகளிலும் உள்ள காட்சிகள் வேறு சில ஆங்கிலப் படங்களில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டதும் தெளிவானது.
நான் சங்கத்தில் கொடுத்துள்ள ஆங்கில படங்களின் தாக்கத்தினால் தான் என் கதையை உருவாக்கினேன். அப்படியிருக்கும் போது நான் எப்படி ஆண்டனியின் பெயரைப் போட்டு பணம் தரமுடியும் என்று லட்சுமண் மறுத்தார். இருவரின் விளக்கங்களைக் கேட்டறிந்த செயற்குழுவும் மற்றும் கதைப்புகார் விசாரணைக்குழுவும் கலந்து ஆலோசித்து 2 கதைகளுமே உங்கள் சொந்தக் கற்பனையில் எழுதப்பட்டதல்ல. ஆங்கில படங்களின் தழுவலாக இருப்பதால் எழுத்தாளர்கள் சங்கம் மேற்கொண்டு இதில் தலையிடாது என முடிவு செய்தனர். மேலும், எங்கள் சங்க விதிகளின் படி ஒரு உறுப்பினர் கதையை பதிவு செய்யும்போது, "இந்தக் கதை என் சொந்த கற்பனையில் உருவான கதை, வேறு மொழிப்படங்களில் இருந்தோ, நாவல்களில் இருந்தோ தழுவி எழுதப்பட்டது அல்ல" என்ற உறுதிமொழியை பெற்றுக் கொண்டு தான் கதை பதிவு செய்பவரிடம் கதையைப் பதிவு செய்கிறோம்.
எனவே ஆண்டனி பிறமொழி படத்தின் கதையை தன் சொந்த கதை என்று சங்கத்தில் பதிவு செய்தது தவறு. அதனால் சங்க விதிகளின் படி ஆண்டனி தாமஸ் புகாரை நிராகரித்தது. லட்சுமண் 'போகன்' கதையை எங்கள் சங்கத்தில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு பெரும் தொகை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ஆண்டனி தாமஸ் சங்கத்தின் மீது, சங்கத்தலைவர் மீதும் தொடர்ந்து அவதூறுகளை பல்வேறு ஊடகங்களில் பரப்பி வருகிறார். நாங்கள் சங்க விதிகளின் படியும், நீதியுடனும், நேர்மையுடனும், நியாயத்துடனும் செயல்படுகிறோம்.
இந்த வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் இருப்பதால் தொடர்ந்து நாங்கள் விவாதிப்பதை விரும்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.