சண்டைப்பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
'சினிமா வீரன்' என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்துக்கான வர்ணனையைத் (வாய்ஸ் ஓவர்) தரவுள்ளார்.
முழுக்க சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படம் இதுவாகும். "சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்" என்று இப்படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, சண்டைப் பயிற்சியாளர்களையும் தேசிய விருது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், மத்திய அமைச்சரிடம் தனது 'சினிமா வீரன்' ஆவணப் படத்தின் சில காட்சியமைப்பைகளையும் காட்டியுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷின் இந்த முயற்சிக்கு தனுஷ் "நல்ல முயற்சி. கண்டிப்பாக இது நடைபெறும் என நம்புகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.