சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமனின் கதை சினிமாவாகிறது.
திருவனந்தபுரம், புத்தன் சந்தை பகுதியில் 1891-ம் ஆண்டு பிறந்தவர் செண்பகராமன். இளம் வயதிலேயே வெளிநாடு சென்ற அவர், அங்கு இருந்துகொண்டே இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்டார். ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர் இவர்தான். இந்தியர்கள் பற்றி அவதூறாகக் கருத்து தெரிவித்த ஹிட்லரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வைத்தவர் செண்பகராமன்.
ஆங்கில அரசுக்கு எதிராக புனித ஜார்ஜ் கோட்டையில், எம்டன் கப்பல் மூலம் குண்டு வீசியவரும் இவர்தான். இவருடைய வாழ்க்கை கதை சினிமாவாகிறது. ஆங்கிலத்தில் உருவாகும் இந்தப் படத்தை ராஜேஷ் டச்ரிவர் இயக்குகிறார்.
இவர் ஏற்கெனவே, ‘இன் த நேம் ஆஃப் புத்தா’, ‘10-த ஸ்ட்ரேஞ்சர்ஸ்’, ‘என்டெ’ உட்பட சில படங்களை இயக்கியவர். அஞ்சும் ரிஸ்வி பிலிம் நிறுவனம், அனுராக் என் டர்டெயின்மென்ட் லிஃப்ட் இண்டியா ஸ்டுடியோஸ் இணைந்து இதைத் தயாரிக்க இருக்கின்றன. இந்தப் படம் தமிழ், மலையாளம் உட்பட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.