தமிழ் சினிமா

இயக்குநர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார்.

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை உறுதிபடுத்தும் வகையில், அண்மையில் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தை குறித்துத் தொடர்ந்து பரவும் வதந்திகள் எதையும் யாரும் நம்ப வேண்டாம். என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்து கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT