ரஜினியைப் பற்றி விவரிக்க சில வார்த்தைகள் மட்டுமே மீதமுள்ளன என்று அமிதாப் பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரஜினிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். தற்போது தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள ரஜினிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் முன்பு ரஜினியின் திரையுலக வாழ்க்கையைப் பற்றிய குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. இதில் பல்வேறு திரையுலகினரும் ரஜினியைப் பற்றி வாழ்த்திப் பேசினர்.
அந்த வீடியோ பதிவில் திரையுலக பிரபலங்கள் பேசியிருப்பதாவது:
அமிதாப் பச்சன்: இந்திய சினிமாவின் இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்க ஆங்கில அகராதியில் ஒருசில வார்த்தைகள் மட்டுமே மீதமுள்ளன. மிக எளிமையான ஒரு பின்னணியிலிருந்து உயர்ந்து, இப்படியொரு இடத்தை அவர் பிடித்துச் சாதித்துள்ளார் என்பதே அசாதாரண விஷயம் என்பதையும் தாண்டிய ஒன்று.
மோகன்லால்: ரஜினிகாந்தின் தனித்துவமான ஸ்டைல், கவர்ச்சியைப் பற்றிப் பேசாமல், அவரது பாவனைகள், அவருக்கே உண்டான அந்த நடையைப் பற்றிப் பேசாமல் அவரைப் பற்றிப் பேசவே முடியாது. இவை முத்திரையைப் பதித்தன, அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் ஒரு பகுதியாக மாறியுள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான்: நான் ரஜினிகாந்திடமிருந்து கற்ற அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர் எப்படி உருமாறுகிறார் என்பதைத்தான். கேமராவுக்குப் பின்னால் அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவே முடியாது. கேமராவுக்கு முன்னால் ஒப்பனை செய்துகொண்டு நிற்கும்போது மொத்தமாக உருமாறி நிற்பார். ஒரு மின்னல் போல.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ரஜினி சார், தனக்கென தனியாக உதவியாள் யாரையும் கேட்க மாட்டார். எல்லோருடனும் கலந்து, உட்கார்ந்து, தேநீர் அருந்தி, உரையாடிக் கொண்டிருப்பார். ஒரு பெஞ்ச் இருக்கும். கண்களில் ஒரு ஈரத்துணியைப் போட்டு மறைத்துக் கொண்டு அங்குதான் தூங்குவார்.
தயாரிப்பாளர் தாணு: திரையுலகில் தீர்க்கதரிசியாக, 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் முதல்நிலை வகித்து வருகிறார் என்றால் அவருக்கு இந்த விருது சாலப் பொருந்தும்.
குஷ்பு: இந்த மனிதர், நிரந்தரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஏனென்றால் அவர் மற்ற மொழிகளில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும் அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்து, பெயர் பெற்றார்.
இவ்வாறு பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.