நண்பர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சாப்பாட்டுக்கே திண்டாடியபோது தன் கையால் சமைத்துப் போட்டவர் என மறைந்த ஸ்ரீகாந்த் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் சிவகுமார்.
திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மறைவையொட்டி, நடிகர் சிவகுமார் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
''1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்தின் கதாநாயகனாக நடித்தவர். ஈரோட்டில் பிறந்த, அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கிற ஸ்ரீகாந்த், மேஜர் சந்திரகாந்த் என்ற கே.பி.யின் நாடகத்தில் ஸ்ரீகாந்த் நடித்த பாத்திரத்தின் பெயர் ஸ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமானபோது அதே பெயரைச் சூட்டிக் கொண்டார். நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர். வாலி- கவிதையில் கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் கிளப் ஹவுஸில் அவ்விருவரையும் காப்பாற்றியவர் ஸ்ரீகாந்த்.
கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ராஜநாகம்’ போன்ற படங்களில் முத்திரை பதித்தவர். என்னோடு ‘மதனமாளிகை’, ‘சிட்டுக்குருவி’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அன்னக்கிளி’, ‘யாருக்கும் வெட்கமில்லை’, ‘நவக்கிரகம்’ எனப் பல படங்களில் நடித்தவர்.
சமீபத்தில் 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் -ஸ்ரீகாந்த் -லீலாவதி -மீரா -கணவர் ZACH அலெக்ஸாண்டர் -பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம், சினிமா - 2 காஃபி டேபிள் புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்தி வந்தேன். இன்று அந்த அற்புதக் கலைஞர் காலமாகி விட்டார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்''.
இவ்வாறு நடிகர் சிவகுமார் தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.