மணிரத்னம், ரகுமான் உள்ளிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்காக ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது குவாலியரிலிருந்து மகேஷ்வர் நகருக்குச் சென்றுள்ளது படக்குழு. குவாலியர் நகரிலிருந்து இந்தூருக்கு நேரடியாக விமானங்கள் இல்லாததால் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''குவாலியரிலிருந்து இந்தூருக்கு ரயிலில் செல்கிறோம். நான் ரயிலில் பயணித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது பழைய நினைவுகளைத் தூண்டுகிறது. மணிரத்னம், ரவிவர்மனுடன் என்னுடைய வேடிக்கையான குட்டிக் கதைகளைப் பகிர்ந்து கொண்டேன். நாங்கள் போக வேண்டிய இடம் மகேஷ்வர். 2 மணி நேரம் சாலை வழியாகப் பயணிக்க வேண்டும்''.
இவ்வாறு ரகுமான் கூறியுள்ளார்.