கேரளாவில் மறுவெளியீடாக தனது முதல் படம் வெளியாகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி, அம்ஸத் கான், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாயா'. யோஹன் இசையமைத்திருந்த இப்படத்தை பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
'மாயா' படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கேரளாவில் 100 நாட்களைக் கடந்து ஒடிக் கொண்டிருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.
இதுகுறித்து 'மாயா' இயக்குநர் அஸ்வின் சரவணனிடம் கேட்ட போது, "பி.வி.ஆரில் 99 நாட்கள் ஒடியதாக சொன்னார்கள். 'சார்லி' என்ற படம் வெளியானதால் படத்தை தூக்கிவிட்டதாகவும் கூறினார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு படம் மறுபடியும் திரையிட்டு இருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. எனது நண்பரும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி இருந்தார்.
எனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் மறுவெளியீடு என்பது பண்டிகை காலங்களில் ஒரு ஷோ என்பது மாதிரி தான் இருக்கும். கேரளாவில் மறுவெளியீடாக எனது முதல் படம் வெளியாகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அடுத்த படம் குறித்து கேட்ட போது, "தற்போது தான் கதை எழுதி வருகிறேன். கதை எழுதி முடித்தவுடன் தான் தயாரிப்பாளர்களிடம் சொல்லி, அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்" என்றார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.