தமிழ் சினிமா

பாஸ்போர்ட்டை மறந்துவிட்டு விமான நிலையம் வந்த ரஜினி

செய்திப்பிரிவு

பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறந்து விட்டு ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் ‘கபாலி’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் நடைபெறும் படத் தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மலேசியா செல்ல ரஜினி சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தார். குடியுரிமை சோதனை நடைபெறும் இடத்துக்கு சென்றபோதுதான் பாஸ்போர்ட்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருப்பது தெரிந்தது.

உடனே தனது வீட்டுக்கு போனில் தொடர்பு கொண்ட ரஜினி, பாஸ்போர்ட்டை கொடுத்து அனுப்பும்படி கூறினார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பாஸ்போர்ட்டை எடுத்து வருபவரை காரில் அனுப்பாமல் மோட்டார் சைக்கிளில் அனுப்பிவைக்குமாறு கூறினார்.

சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரஜினியிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். சென்னையில் இருந்து பகல் 11.15 மணிக்கு மலேசியாவுக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக வந்ததால், பகல் 11.45 மணிக்குதான் புறப்பட்டது. விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால், அந்த விமானத்தில் ரஜினியால் செல்ல முடிந்தது.

SCROLL FOR NEXT