தமிழ் சினிமா

கரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் கூறும் வழிமுறைகள்

செய்திப்பிரிவு

பொதுமக்கள் கரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 35,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த நாளை (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதற்காக இன்று ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் காலை முதலே பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கக் குவிந்து வருகிறார்கள். இதனை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.

இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடிகர்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சரண்யா பொன்வண்ணன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு வருடமாக கரோனா நம்மை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வருடத்தில் முடிந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பல வழிமுறைகள் உள்ளன.

அதில் முக்கியமானது, நாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொற்று தீவிரமாகாமல் கண்டிப்பாக அது நம்மைக் காக்கும். நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அடுத்து முகக் கவசம். பலருக்கும் எப்படி அணிவது என்றே தெரிவதில்லை. மூக்கையும், வாயையும் தான் முக்கியமாக மூட வேண்டும். ஆனால் பலர் முகக் கவசத்தை வாய்க்குக் கீழ் இறக்கி வைத்துவிட்டுப் பேசுகின்றனர்.

2 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள். பல வகையான முகக் கவசங்கள் உள்ளன. இதில் துணியால் ஆனது பயன் தராது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதைப் பயன்படுத்தாதீர்கள். மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக் கவசத்தைப் பயன்படுத்துங்கள். முடிந்தால் அதற்கு மேல் இன்னொரு முகக் கவசம் என, இரட்டை முகக் கவசங்கள் அணிவது சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நம் வீட்டுக்குள் இருக்கும் குடும்பத்தினருடன் இருக்கும் போது பரவாயில்லை. ஆனால் உறவினர் யாராவது உங்களைப் பார்க்க வந்தால் உடனடியாக முகக் கவசம் அணியுங்கள். அவர்களையும் அணியச் சொல்லுங்கள். நம்மையும், உலகையும் காக்க இதையெல்லாம் பின்பற்ற வேண்டும். நமக்காகத் தான் அரசாங்கம் இந்த விஷயங்களைச் சொல்லியிருக்கிறது.

இதைப் பின்பற்றவில்லை என்றால் இந்தக் காலம் நீண்டு கொண்டே போகும். நாலு பேர் மட்டும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. எல்லோரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். செய்தால் கரோனாவை சீக்கிரம் விரட்டிவிடலாம். சில நாள் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் சில நாள் மட்டுமே அந்தக் கடினச் சூழல் இருக்குமா என்பதும் நம் கையில் தான் உள்ளது.

எனவே தயவு செய்து தடுப்பூசி, கைகள் சுத்தம், முகக் கவசம், சமூக இடைவெளி என எதையும் மறக்காதீர்கள். அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம். நம் நாட்டைக் காப்போம்"

இவ்வாறு சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT