தமிழ் சினிமா

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய்?

செய்திப்பிரிவு

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் எனவும் கூறப்படுகிறது.

வம்சி பைடிபல்லியின் முந்தைய படமான 'மகரிஷி' மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு, விஜய் - வம்சி பைடிபல்லி இணையும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, "இப்போதுதான் நெல்சன் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பே முடிந்துள்ளது. அந்தப் படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்தவுடன்தான், அடுத்து யாருடன் படம் பண்ணலாம் என்பதற்கான பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கவுள்ளார். அதுவரை வெளியாகும் அனைத்துச் செய்திகளும் வதந்தியே" என்று தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT