இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் பின்னர் 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ‘கவன்’ ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.