பழம்பெரும் நடிகை மனோரமா(77) மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை மனோரமா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதிலிருந்தே வெளி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பேரனும், மருத்துவருமான ராஜராஜன் கூறுகையில், “திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.