எப்படிப் போற்றினாலும் குறைவாகத் தான் இருக்கும் என்று விவேக் மறைவுக்கு ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தற்போது விவேக் மறைவு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“விவேக் அவர்களை எப்படிப் போற்றினாலும் அது குறைவாகத் தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம். பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்”
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.