தமிழ் சினிமா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நாயகனாகும் அதர்வாவின் தம்பி

செய்திப்பிரிவு

விஷ்ணுவர்தன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்புக்காகக் கதைகள் கேட்டு வந்தார். அதில் தனது மருமகன் ஆகாஷ் முரளியை நாயகனாக்க விரும்பினார்.

பல்வேறு இயக்குநர்கள் கூறிய கதையில் விஷ்ணுவர்தன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக சேவியர் பிரிட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

" 'மாஸ்டர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. பன்முகத் திறமை வாய்ந்த இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நடிகர் முரளியின் மகனும், அதர்வா முரளியின் இளைய சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்".

இவ்வாறு சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT