பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது படக்குழு. இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு முன்னதாக 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் சூர்யாவுக்கு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 40' என அழைத்து வருகிறது படக்குழு. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.