விக்னேஷ்சிவன் இயக்கி இருக்கும் 'நானும் ரவுடிதான்' படத்துக்காக முதன் முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் நயன்தாரா
விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆனந்த்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம் 'நானும் ரவுடி தான்'. படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் பாடல்களை ஒவ்வொரு பாடலாக இணையத்தில் வெளியிட்டது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
முதன் முறையாக 'நானும் ரவுடி தான்' படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் "முதன் முறையாக என் படத்தின் நாயகி நயன்தாரா பெரும் முயற்சி எடுத்து டப்பிங் பேசியிருக்கிறார். அவருக்கு நன்றி " தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இம்மாத இறுதியில் இப்படத்தை வெளியிட, இறுதி கட்டப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது படக்குழு.