'மஹா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு கோடைக்குப் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 'மஹா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
'மஹா' படப்பிடிப்பு முடிவடைந்தது தொடர்பாக ஹன்சிகா கூறியிருப்பதாவது:
"இந்த 2020-ம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மைத் தற்காத்துக் கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்தக் கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தி, தவிக்கவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மடிந்துபோன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன்.
இன்னொரு புறம் கரோனா முன்களப் பணியாளர்கள் கடும் உழைப்பைத் தந்து, இந்தக் கொடிய காலத்தில் நம்மைப் பாதுகாத்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்தக் கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடந்து வந்திருக்க இயலாது. கடும் மன உறுதியுடன், மனிதம் காக்க போராடிய அந்த வீரர்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் வணங்குகிறேன்.
'மஹா' திரைப்படம் முழுமையாக முடிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பல தடைகளைத் தாண்டி நீடித்த, இந்தப் படப்பிடிப்பில், பங்குகொண்ட படக்குழுவினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுதாகக் கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய இயக்குநர் ஜமீலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்தப் படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரமாகப் பங்குகொள்ள ஒப்புக்கொண்ட சிம்புவுக்குப் பெரும் நன்றி. படத்தில் அவரின் பகுதிகளை ரசிகர்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கொண்டாடுவார்கள்"
இவ்வாறு ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.