நல்ல நண்பன் எஸ்பிபியை இழந்துவிட்டேன் என்று கங்கை அமரன் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று (செப்டம்பர் 30) எஸ்பிபி-யின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்து கொண்டு எஸ்பிபி பற்றி தங்களுடைய நினைவஞ்சலியைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் கங்கை அமரன் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:
"எஸ்பிபி போவதற்கு 4 நாட்களுக்கு முன்பே எனக்கு ஆரம்பிச்சுடுச்சு. என்னமோ நடக்கப் போகுதே என்ற உணர்வு. அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதிலிருந்து பிடித்தது தான். எஸ்பிபிக்கு நெருங்கிய நண்பன் என்பதை எல்லாம் கடந்து பிரம்மாண்டமான ஆள். எவ்வளவு சாதனை செய்த ஒரு ஆள். ரொம்ப எளிமையாக நடந்து கொள்ளக் கூடிய ஒரு மனிதர். அவர் இல்லை என்பதை என்னால் தாங்க முடியவில்லை.
நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக் கொண்டாலும், தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் வீட்டில் இருப்பவர்கள் இங்கு தானே வருவார், உட்காருவார் என்று நினைப்பீர்கள். அதனால் உங்களுக்கு எல்லாம் எப்படி ஆறுதல் சொல்லுவது எனத் தெரியவில்லை. தயவு செய்து அதிலிருந்து மீண்டு வாருங்கள். என் அண்ணன் கூட என் மீது அவ்வளவு ஆசை வைக்கவில்லை. அவ்வளவு ஆசை வைத்திருந்த என் நல்ல நண்பனை இழந்து அவ்வளவு வருத்தப்படுகிறேன்.
நானே இவ்வளவு வருத்தப்படும் போது, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும். நாங்கள் எப்படியாவது தேறி வந்துவிடுவோம். குடும்பத்தினர் தினமும் பதறாமல் இருங்கள். ஆறுதல் அடையுங்கள். நம்ம கூடவே தான் இருப்பான் பாலு. பகல் எல்லாம் அவனுடைய நினைப்பாகவே இருந்தேன். இரவு எல்லாம் தூக்கம் வராமல் அழுது கொண்டிருந்தேன்.
ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கனவில் வருவார்கள் என்று சொல்வார்கள். அந்தக் கனவு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிலாவது அவனைப் பார்க்கலாமே என்று. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். நானும் ஆறுதல் ஆயிடுறேன்.. ஆயிடுறேன்... ஆயிடும்... ஆயிடும். என் நண்பனை இழந்துவிட்டேனே. அவர் உயிருடன் பக்கத்திலேயே இருப்பது போல் நினையுங்கள்"
இவ்வாறு கங்கை அமரன் கண்ணீருடன் பேசினார்.