பிக் பாஸ் நிகழ்ச்சியின் செயல்பாடுகளை நடிகை லட்சுமி மேனன் கடுமையாகச் சாடியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. ஆனால், யாருடைய பெயரும் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமி மேனன் கலந்து கொள்ளவுள்ளார் என்று சில நாட்களாகவே செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. இந்தச் செய்தி தொடர்பாக லட்சுமி மேனன் அமைதியாகவே இருந்ததால், இது உண்மையாக இருக்கும் என்று கருதி, இச்செய்தி வைரலாகப் பரவியது.
தற்போது இது தொடர்பாக லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:
"நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் ப்ளேட்களையும், கழிப்பறைகளையும் நான் இப்போதும் எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமராவின் முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன்".
இவ்வாறு லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுக்குப் பிறகு பலரும் லட்சுமி மேனனை விமர்சித்தனர். ப்ளேட்கள், கழிப்பறையைக் கழுவுவது கேவலமான விஷயமா என்று கேள்வி எழுப்பி, அவரைப் பலரும் சாடினர்.
இதற்கு வீடியோவில் பதில் அளித்து லட்சுமி மேனன் பேசியதாவது:
"கொஞ்ச நேரத்துக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துப் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். உனக்கு ப்ளேட் கழுவுவது, கழிப்பறைகளைக் கழுவுவது கேவலமாக இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? அனைத்துமே என்னுடைய விருப்பம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறையப் பேருக்குப் பிடிக்கலாம், பிடிக்காமல் இருக்கலாம்.
நிறையக் காரணங்களுக்காக எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் போகவில்லை. என் வீட்டில் நான் உபயோகிக்கிற ப்ளேட்கள், கழிப்பறைகளை நான்தான் சுத்தம் செய்வேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போய் நான் அதைச் செய்ய விரும்பவில்லை. கேமரா முன்பு மற்றவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, ப்ளேட்கள், கழிப்பறைகளைக் கழுவுவது எல்லாம் எனக்குத் தேவையில்லை.
நிறையப் பேர் என்னிடம் பிக் பாஸ் போகிறீர்களா என்று கேட்கும்போது, கஷ்டமாக இருக்கிறது. மற்றவர்களின் விருப்பத்தைக் கேள்வி கேட்க யாருக்குமே உரிமையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்".
இவ்வாறு லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.