எஸ்பிபி இன்றி நமக்கு ஆளுமைமிக்க குரல் கிடையாது என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நம் நாட்டுக்கும் சினிமா உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரின்றி நமக்கு ஆளுமைமிக்க குரல் கிடையாது. அவரது ரசிகர்களைப் போலவே நானும் மிகுந்த சோகத்தில் உள்ளேன். அன்புள்ள எஸ்பிபி சார், உங்கள் அற்புதமான வாழ்வுக்காகவும், என் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காகவும், நான் மண்டியிட்டு, உங்கள் பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்".
இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.