எல்லோருடைய இல்லங்களிலும் எதிரொலிக்கும் ஒரு குரல் என்று எஸ்பிபிக்கு தனுஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆன்மா சாந்தியடையட்டும் எஸ்பிபி சார். என்றும், எல்லோருடைய இல்லங்களிலும் எதிரொலிக்கும் ஒரு குரல். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர். இன்னும் பல தலைமுறைகளுக்கு நீங்களும் உங்கள் குரலும் எங்களோடு இருப்பீர்கள். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள். அனைத்துக்கும் நன்றி சார். உங்கள் இழப்பை நாங்கள் உணர்வோம்".
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.