எழில் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளனர்.
குறைந்த பட்ஜெட், குறைந்த நாட்கள் எனத் திட்டமிட்டு படங்களை உருவாக்குபவர் இயக்குநர் எழில். தொடர்ச்சியாக இவருடைய படத்தில் முதலீடு செய்த பணம், திரும்ப வந்துவிடுவதால் பல தயாரிப்பாளர்கள் இவரோடு இணைந்து பணிபுரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களை எழில் இயக்கியுள்ளார். இரண்டு படங்களையும் முழுமையாக முடித்துவிட்டார். பைனான்ஸ் சிக்கல்களால் இந்தப் படங்கள் இன்னும்வெளிவரவில்லை.
தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் எழில் ஈடுபட்டு வந்தார். இந்தக் கதையில் பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படம் அவருடைய முந்தைய படங்களைப் போல காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.
பார்த்திபன் மற்றும் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.