எஸ்.பி.பி குறித்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சையில் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்து வந்தது.
இதனிடையே இன்று (ஆகஸ்ட் 14) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. அதில், உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும், மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சில விஷமிகள் வேண்டுமென்றே எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பினர். இது தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். நம் அன்புக்குரிய எஸ்பிபி சார் விரைவில் குணமடையவும், திரும்பி வந்து நம்மை மகிழ்விக்கவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்"
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவும், எஸ்.பி.பி மகன் எஸ்.பி.சரணும் நெருங்கிய நண்பர்கள். ஆகையால் வெங்கட் பிரபுவின் ட்வீட்டின் மூலம் எஸ்.பி.பி நலமாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.