தமிழ் சினிமா

மலப்புரம் மக்களுக்கு சல்யூட்: சூர்யா

செய்திப்பிரிவு

கோழிக்கோடு விமான விபத்தில் உடனடியாகப் பயணிகளைக் காப்பாற்றிய மலப்புரம் மக்களுக்கு சல்யூட் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழுந்தபோது பெரிய அளவில் வெடிச் சத்தம் கேட்டது. உடனே, விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றினர்.

இந்த விமான விபத்தில் 18 பேர் இறந்துவிட்டனர். 150 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். மலப்புரம் மக்களுக்கு சல்யூட். பைலட்களுக்கு என்னுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT