என் பெயரில் உலா வரும் மோசடியை நம்பி ஏமாற வேண்டாம். தயவுசெய்து புகார் செய்யுங்கள் என்று இயக்குநர் மித்ரன் தெரிவித்துள்ளார்.
'இரும்புத்திரை' மற்றும் 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் மித்ரன். இதில் விஷால் நடிப்பில் உருவான 'இரும்புத்திரை' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் மித்ரன்.
கரோனா ஊரடங்கில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகளைக் கவனித்து வந்தார் மித்ரன். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனிடையே இயக்குநர் மித்ரன் தனது பெயரில் உலா வரும் மோசடி குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் மித்ரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"யாரோ ஒருவர் என்னுடைய நண்பர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் நடிகர்கள் தேர்வுக்காகத் தொடர்பு எண்களைக் கேட்பதாக என்னுடைய கவனத்துக்கு வந்துள்ளது. இந்த நபரை எனக்குத் தெரியாது. பிறரிடமிருந்து தொடர்பு எண்/ புகைப்படங்களைச் சேகரிக்கும் அதிகாரத்தையும் நான் யாருக்கும் வழங்கவில்லை. இதுபோன்ற மெயில் உங்களுக்கு வந்தால் தயவுசெய்து புகார் செய்யுங்கள்”.
இவ்வாறு இயக்குநர் மித்ரன் தெரிவித்துள்ளார்.