மற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள். இது சரியல்ல என்று இணையத் துன்புறுத்தல் தொடர்பாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இந்தத் திருமணம் முடிந்த அடுத்த நாளிலிருந்து சர்ச்சையில் சிக்கினார் வனிதா விஜயகுமார். பீட்டர் பாலின் மனைவி காவல்துறையில் புகாரளிக்கவே, இது தொடர்பாகப் பலரும் பேட்டிகள் கொடுக்க சமூக வலைதளத்தில் பலரும் விவாதிக்கத் தொடங்கினர்.
ஆனால், வனிதா விஜயகுமார் கடுமையாக பதிலடி கொடுக்கவே அனைவரும் பின்வாங்கினார்கள். மேலும், பலர் தங்களுடைய கருத்துகளையும் நீக்கிவிட்டார்கள். தன் திருமணம் தொடர்பாக தொடர்ச்சியாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
இதனிடையே தொடர்ச்சியாக நடைபெறும் இணையத் துன்புறுத்தல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது:
"உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாதவர்கள் எல்லாம் என்னைக் குறிவைப்பதில் ஆனந்தம் அடைகிறார்கள். ஒருவரைத் துன்புறுத்துவதும், கொச்சையான, அசிங்கமான கருத்துகளைத் தெரிவிப்பதும் சட்டத்துக்குப் புறம்பானது என்பது தெரிந்துகொள்ளுங்கள்.
'இணையத் துன்புறுத்தல்' என்பது விளையாட்டல்ல. அது ஒருவரின் வாழ்க்கையையே பாழாக்கக் கூடிய ஒன்று. நீங்கள் எனக்கு செய்ய முயற்சிப்பதை நான் சீரியஸாக எடுத்துக்கொண்டால் நான் மன அழுத்தத்தினாலும், விரக்தியினாலும் என்னையே துன்புறுத்திக் கொள்ளக்கூடும். அப்படிச் செய்தால் நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள். இதை மற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள். இது சரியல்ல.
நான் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் சட்டம் என்னைச் சும்மா விடாது. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். நான் அவருக்கும் என் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதுமானது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்களுக்கு உண்மைக்கு நெருக்கமான எந்த விஷயமும் தெரியாது. இதுபோன்ற எல்லா வகையான குப்பைகளையும் எழுதுவது நான் யார் என்று சொல்லாது. ஆனால், நிச்சயமாக நீங்கள் யார் என்று சொல்லும்".
இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.