தமிழ் சினிமா

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா? - ரம்யா பாண்டியன் பதில்

செய்திப்பிரிவு

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்வீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு ரம்யா பாண்டியன் பதிலளித்துள்ளார்.

'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'ஆண் தேவதை' எனும் படத்தில் நடித்தார். தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார்.

படங்களைத் தாண்டி இவர் விஜய் தொலைக்காட்சியின் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும், சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டமும் உண்டு.

இந்தக் கரோனா ஊரடங்கில் எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு வீடியோ வடிவில் பதிலளித்துள்ளார் ரம்யா பாண்டியன். அதில் தான் நடித்து வரும் படங்கள் குறித்துப் பேசியுள்ளார். மேலும், புதிய போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளதாகவும் விரைவில் அதை அப்டேட் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என்றும், எப்போதுமே ரஜினி ரசிகை எனவும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 'பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்லவுள்ளீர்களா' என்ற கேள்விக்கு ரம்யா பாண்டியன், "தெரியவில்லை. இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பிலிருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால்தானே சொல்ல முடியும்" என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலம் என்பதால், விரைவில் தொடங்கவுள்ள 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களில் ஒருவராக ரம்யா பாண்டியன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT