தமிழ் சினிமா

டிக் டாக் தடை மக்களை மாற்றாது, எனக்கு ஒரு கவலையும் இல்லை: சம்யுக்தா ஹெக்டே கருத்து

செய்திப்பிரிவு

டிக் டாக் தடை மக்களை மாற்றாது என்று நடிகை சம்யுக்தா ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களிடையே பிரபலமாகி வரும் செயலி டிக் டாக். இதில் பல்வேறு பிரபலங்களும் இணைந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட டிக் டாக் செயலியில் உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட 50 கணக்குகளில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணக்கும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே வேளையில், டிக் டாக் செயலியினால் பெரும் சர்ச்சையும் உருவாகியுள்ளது. மதரீதியிலான வீடியோக்கள், பெண்களை அவமதிக்கும் வீடியோக்கள் அதிகமாகி வருவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. மேலும், தடை விதிக்கக் கோரும் வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக 'கோமாளி' மற்றும் 'பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு தளத்தை தடை செய்வதன் மூலம் அந்த தளத்தில் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது. அந்தத் தளம் இல்லையென்றாலும் அவர்களது கூச்சப்பட வைக்கும் விஷயங்களை பதிவேற்ற மக்கள் வேறொரு தளத்தைக் கண்டெடுப்பார்கள். பின் குறிப்பு: எப்படியும் டிக் டாக்கிற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை"

இவ்வாறு சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT