சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததிற்கு தமிழக அரசுக்கு ஸ்டெப்ஸ் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறாமல் இருந்தது. இதனால் கடும் பொருளாதார இழப்பை ஏற்பட்டுள்ளது. தொழில்துறைக்கு தமிழக அரசு அனுமதியளித்த உடன், தமிழ்த் திரையுலகினரும் படப்பிடிப்பு தொடங்க அனுமதி கோரினார்கள்.
முதலில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மற்றும் தகவல், விளம்பரத்துறை அமைச்சருக்கு தென்னிந்திய தொலைகாட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டெப்ஸ் தலைவர் சுஜாதா விஜயகுமார் கூறியிப்பதாவது:
"கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழிலாளர்கள் நிறைய அவதிப்பட்டனர். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். படப்பிடிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்களான நாங்கள் இன்று ஜூம் செயலி மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினோம். '
முன்னதாக, நானும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளருமான குஷ்பு சுந்தர் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க கோரிக்கை வைத்தோம் அதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்று உறுதியளித்தார். ஷூட்டிங் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை அவர் துரிதமாகக் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் தகவல் மற்றும் விளம்பர அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"
இவ்வாறு சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஸ்டெப்ஸ் செயலாளர் குஷ்பு சுந்தர் கூறியிருப்பதாவது:
"முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறோம். "
கடந்த 70 நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். நிலைமையைப் பார்த்து, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் கடம்பூர் ராஜுவை அணுகினோம். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி எங்களுக்கு ஒரு வரமாக வந்துள்ளது. '
ஜூம் அழைப்பு மூலம் அனைத்து விஷயங்களையும் பல்வேறு சேனல்களில் தொலைக்காட்சி சீரியல்களைத் தயாரிப்பவர்களுடன் விவாதித்தோம். எப்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்குவது என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம். அரசாங்கம் வகுத்துள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். மிக விரைவில், நாங்கள் வேலையைத் தொடங்குவோம். ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையும்"
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்