தமிழ் சினிமா

காவல்துறையினரின் சேவை கடவுளுக்குச் சமமானது: வரலட்சுமி

செய்திப்பிரிவு

காவல்துறையினரின் சேவை கடவுளுக்குச் சமமானது என்று வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் மூலமாக பரவியதால், அருகிலிருக்கும் மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதனால், கரோனா பரிசோதனை துரிதப்படுத்தி வருகிறது தமிழக அரசு.

இந்த கரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது பணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருவித அச்ச உணர்வை காவல்துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

"காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு அவ்வளவு கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. கடும் வெயிலிலும் நின்று கொண்டு உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம்"

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT