பெண் பிரசவத்தில் கஷ்டப்படுகிறாள். ஆண் என்ன செய்கிறான் என்று அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபமாக இணையத்தில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் அமலாபால். அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார் பாவ்னிந்தர் சிங். ஆனால், சில மணித்துளிகளில் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார் பாவ்னிந்தர் சிங்.
இந்தத் திருமண சர்ச்சை தொடர்பாக அமலாபால் எங்குமே பேட்டி அளிக்கவில்லை. ஆனால், அமலாபால் பேட்டி என்று பல இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதற்கும் அமலாபால் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, இன்று நடிகை அமலா பால், ஓஷோ எழுதியிருக்கும் 'தி புக் ஆஃப் வுமன்' என்ற புத்தகத்தின் வரிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன் தமிழாக்கம்:
''தி பிராஃபட்டில் எல்லா சிறந்த கேள்விகளையுமே பெண்களே கேட்டிருக்கின்றனர். காதலைப் பற்றி, திருமணம் பற்றி, குழந்தைகள் பற்றி, வலியைப் பற்றி.
கடவுளைப்பற்றி அல்ல, வேறெந்த தத்துவ அமைப்பைப் பற்றியும் அல்ல, வாழ்க்கையைப் பற்றி மட்டுமே.
இந்தக் கேள்விகள் ஏன் ஆண்களிடம் எழாமல் பெண்களுக்குத் தோன்றியுள்ளது?
ஏனென்றால் பெண் அடிமைத்தனத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறாள், பெண் அவமானங்களைச் சந்தித்திருக்கிறாள், பெண் பொருளாதாரச் சார்பால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து கர்ப்பம் தரிப்பது என்ற நிலையால் அவதிப்பட்டிருக்கிறாள்.
பல நூற்றாண்டுகளாக அவள் வலி, வலியில் மட்டும் வாழ்ந்திருக்கிறாள். அவளுக்குள் வளரும் குழந்தை அவளைச் சாப்பிட விடுவதில்லை. அவளுக்கு எப்போதும் குமட்டலும், எப்போது சாப்பிட்டதை வெளியே எடுப்போமோ என்ற உணர்வும் இருக்கும்.
குழந்தை 9 மாதங்கள் வளர்ந்த பின், குழந்தை பிறப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் இறப்புதான். ஒரு பிரசவம் முடிந்த பிறகு சிறிது நாட்கள் கூட ஓய்வு தராமல், அவளது கணவன் அவளை இரண்டாம் முறை கர்ப்பமாக்கத் தயாராக இருக்கிறான்.
பெண்ணின் ஒரே வேலை மக்கள் கூட்டத்தை உருவாக்கும் தொழிற்சாலை போல இருப்பதுதான் என்பது போலத் தெரிகிறது.
ஆணின் வேலை என்ன? ஆண் வலியில் பங்கெடுக்க மாட்டான். 9 மாதங்கள் பெண் கஷ்டப்படுகிறாள், பிரசவத்தில் கஷ்டப்படுகிறாள். ஆண் என்ன செய்கிறான்?
ஆணைப் பொறுத்தவரை, அவன் பெண்ணைத் தனது காமத்தை, பாலியல் தேவைகளைத் தீர்த்து வைக்கும் பொருளாக மட்டுமே உபயோகப்படுத்துகிறான். அதனால் பெண்ணுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் அவனுக்குச் சுத்தமாகக் கவலையில்லை.
ஆனாலும் அவன் தொடர்ந்து 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்வதைத் தொடர்வான். அவன் உண்மையிலேயே அவளைக் காதலித்திருந்தால், இந்த உலகத்தில் மக்கள்தொகை அதிக அளவில் பெருகியிருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை வெறுமையானது. அவளை ஒரு கால்நடை போலத்தான் நடத்தியிருக்கிறான்''.
புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளைப் பகிர்ந்ததற்கான காரணம் எதையும் அமலா பால் குறிப்பிடவில்லை.
அமலாபால் இதை மட்டும் தனியாகப் பகிர்ந்திருப்பதால், இந்தக் கருத்துக்கு அவர் உடன்படுகிறார் என்பது தெளிவாகிறது.