திரைப்படத் துறைக்கு சமூக இடைவெளி முறையில் தளர்வு அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் என்பது சில மாநிலங்களைத் தவிர்த்து, இதர மாநிலங்களில் இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் சென்னையில் கரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்றிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இந்தக் கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை தொடர்பாக எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதே தெரியவில்லை. அப்படித் தொடங்கினாலும் முன்பு போல் நடைபெறுமா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
மேலும், கரோனா ஊரடங்கு முடிந்தாலும் சமூக இடைவெளி என்பது தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதனிடையே, தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பு. திரைப்படத் துறையில் பல கோடி முதலீடு முடங்கிவிட்டது. திரைப்படங்கள் / தொலைக்காட்சித் தொடர்கள், இறுதிக்கட்டப் பணிகள் தொடர சமூக இடைவெளி முறையில் தளர்வு அளிக்கப் பரிசீலனை செய்ய வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்"
இவ்வாறு தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.