மனித இனத்தின் திறனுக்கு இந்த கோவிட் 19 ஒரு முக்கிய சோதனையாக இருக்கப்போகிறது என்று இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளன. கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி வரும் மார்ச் 22 ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு திரையுலக பிரபலங்களும் மக்களுக்கு அறிவுரை கூறிவருகிறார்கள். பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தற்போது கரோனா வைரஸ் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
”மனித இனத்தின் திறனுக்கு இந்த கோவிட் 19 ஒரு முக்கிய சோதனையாக இருக்கப்போகிறது. நம் அனைவரையும் பாதுகாப்பாக வைக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து நின்று, நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மக்கள் ஊரடங்கு முயற்சியை ஆதரிப்போம்”
இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.