தமிழ் சினிமா

வாட்ச்மேன் டூ தமிழ் வாத்தியார்: சதீஷ் பகிர்ந்துள்ள உத்வேகப் பகிர்வு

செய்திப்பிரிவு

தன் குடியிருப்பில் இருக்கும் வாட்ச்மேன் ஒருவரைப் பற்றி சதீஷ் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சதீஷ். 'அண்ணாத்த', 'டெடி', 'ரங்கா', 'பூமி', 'ராஜவம்சம்' உள்ளிட்ட பல படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணம் நடந்தது.

சதீஷ், தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது குடியிருப்பில் இருக்கும் வாட்ச்மேன் ஒருவரைப் பற்றிப் பேசியிருக்கும் வீடியோ பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

ட்விட்டர் வீடியோவில் சதீஷ் பேசியிருப்பதாவது:

"நம் வாழ்க்கையில் உத்வேகம் என்பது எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். அப்படி உத்வேகம் அளிக்கக்கூடிய நபர் ஒருவரைத்தான் அறிமுகப்படுத்தவுள்ளேன். எங்களது குடியிருப்பில் வாட்ச்மேனாகப் பணிபுரிகிறார் பாலுசாமி. ரொம்பத் தன்மையாக அழகாகத் தமிழில் பேசுவார். நேற்று அடுத்த ஒரு மாதம்தான் வருவேன், அடுத்ததாக வேலம்மாள் பள்ளியில் பணிக்குச் சேர்கிறேன் என்று தெரிவித்தார். அங்கும் வாட்ச்மேனாகத் தான் சேரவுள்ளார் என நினைத்து என்னவாக சேரவுள்ளீர்கள் என நினைத்துக் கேட்டேன்.

தமிழ் வாத்தியாராக 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு ஆகியவற்றுக்குப் பாடம் எடுக்கும் பணியில் சேர்கிறேன் என்றார். உண்மையில் பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர் எம்.ஏ, பி.எட், எம்.பில் படித்துள்ளார். அவ்வளவு படித்துவிட்டு நல்ல வேலை கிடைக்கும் வரை, வாட்ச்மேனாகப் பணிபுரிந்திருக்கிறார். இவர்தான் அவர் (பாலுசாமியை அறிமுகப்படுத்தி வைக்கிறார்)

அதனைத் தொடர்ந்து பாலுசாமி, "ஒரு வேலையில் இருந்துகொண்டு இன்னொரு வேலையைத் தேடுவதுதான் புத்திசாலித்தனம் என நினைக்கிறேன். அதே மாதிரி வேலம்மாள் பள்ளியில் எனக்குக் கிடைத்த வேலை என்பது என் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம். அந்தத் திறமையைப் பயன்படுத்தி இந்தச் சமூகத்துக்கு நல்ல மாணவர்களை உருவாக்குவேன். வணக்கம்" என்று பேசியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து சதீஷ், "மிகப்பெரிய உத்வேகம்தான் இவர். நன்றி" என்றார்.

SCROLL FOR NEXT