கரோனா அச்சத்திலிருந்து விலகி இயல்பு நிலை திரும்பியவுடன், பட வெளியீட்டில் திரையரங்குகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று 'காக்டெய்ல்' படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சம் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று 137 பேருக்கு இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்விக்கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மார்ச் 20-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் யாவும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகிறது. தற்போது மார்ச் 20-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்ட 'காக்டெய்ல்' படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா, தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"மனித இனம் மகிழ்ந்திருக்க உருவாக்கப்பட்டதே கலை. அக்கலை, மனிதர்களின் நலம், வளம் சார்ந்தே வரவேற்கப்படுகிறது. மனிதன் தன் மகிழ்வான பொழுதுகளை அமைத்துக்கொள்ள ஆரோக்கியமான உடல் நலமுடன் இருப்பது முக்கியம். தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது மிகப் பயங்கர தொற்று நோயான கரோனா வைரஸ். பாதிக்கப்பட்ட அநேகரை நினைத்து கவலை கொள்கிறது ’காக்டெய்ல்’ படக்குழு.
இன்னமும் இந்நோய் பரவும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நமது தமிழக அரசும் வரும் முன் காக்கும் நடவடிக்கைகளை மிகத் துரிதமாகச் செய்து வருகிறது. நன்றி!
மக்கள் அதிகம் கூடும் எல்லா இடங்களையும் அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதில் திரையரங்குகளும் அடங்கும். ’காக்டெய்ல்’ படக்குழு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எங்கள் ‘காக்டெய்ல்’ படம் வருகின்ற 20- ம் தேதி திரைக்கு வரவிருந்தது.
தற்போது திரையரங்குகள் மூடப்படுவதால் எங்கள் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட வெளியீட்டை நோக்கி விளம்பரம் திரையரங்குகளுக்கான முதலீடுகள் என நிறையப் பணம் செலவு செய்துள்ளோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் படம் வெளியாக முடியாததால் அதிக இழப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளது. நாடே பேரிடர் நோக்கி நிற்பதால், இவ்விழப்பை நாங்கள் கணக்கில் கொள்வது முறையல்ல. எப்போது வெளியானாலும் எங்கள் ‘காக்டெய்ல்’ படம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், அதற்கு ஈடாக, நிலைமை சீராகி மீண்டும் திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும்போது இந்த வாரம் வெளியாகாமல் நின்று போன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அச்சமயம் பெரிய படங்களோ, கூடுதல் படங்களோ வெளியாகி விடாமல் ஒழுங்குபடுத்தித் தருவதோடு எங்கள் படங்களுக்குத் தேவையான நல்ல திரையரங்குகளை ஒதுக்கித் தர வேண்டும்.
அதுவே எங்களது இழப்பைச் சரி செய்ய நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் தமிழக அரசும் இதைக் கருத்தில் கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
’நிலை மாறும் உலகில்’ இன்றைய இந்த அபாயகரமான நிலை விரைவில் மாற வேண்டிக் கொள்கிறேன். சினிமா தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நலனில் அக்கறையுடன் மீண்டும் ஒரு தேதிக்காகக் காத்திருக்கிறோம்”.
இவ்வாறு 'காக்டெய்ல்' படக்குழு சார்பில் பி.ஜி.முத்தையா தெரிவித்துள்ளார்.