பெண்களை எப்படி மதிப்பது என்று தெரிந்த ஆண்களுடன் உள்ள எதிர்கால தமிழ் சினிமா அதிர்வுடன் இயங்குகிறது என்று 'மாஸ்டர்' படக்குழுவுக்கு விஜே ரம்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ள விஜே ரம்யா படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''பிரமாதமான, அபாரமான, முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் படக்குழு. இந்த அமைதியான, கேளிக்கையான ஆனால் கட்டுக்கோப்புடன் இயங்கும் குழு இது. ஒட்டுமொத்த அனுபவத்தையும் அழகானதாக, மறக்க முடியாததாக மாற்றியுள்ளது. புன்னகை முகத்துடன் நன்றி.
பெண்களை எப்படி மதிப்பது என்று தெரிந்த ஆண்களுடன் உள்ள எதிர்கால தமிழ் சினிமா அதிர்வுடன் இயங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'மாஸ்டர்' வாய்ப்பு தொடர்பாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், "129 நாட்கள் இடைவெளியற்ற படப்பிடிப்பு! மாஸ்டர்... இது புன்னகைக்கும் கண்களுடன் புன்னகை தவழும் முகம்! இந்தப் பயணம் என் இருதயத்துக்கு நெருக்கமானது.
என்னையும் என் குழுவையும் நம்பியதற்காக விஜய் அண்ணாவுக்கு நன்றி. என்னுடைய இந்த இயக்கக் குழு இல்லாமல் இந்த இமாலயப் பணியை எளிதில் முடித்திருக்க முடியாது. உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன்”என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனராஜ்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகளைக் கவனித்துக்கொண்டே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ளவுள்ளது படக்குழு. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.