தமிழ் சினிமா

மீண்டும் நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்: அஜ்னபி கதையில் சூரி

செய்திப்பிரிவு

நாவலை மையமாகக் கொண்டு 'விசாரணை', 'அசுரன்' படங்களை இயக்கிய வெற்றிமாறன் மீண்டும் நாவலைத் தழுவி படம் இயக்குகிறார். இதில் சூரி நாயகனாக நடிக்கிறார்.

மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து 'விசாரணை' படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இது காவல்துறையின் அவலங்களை தோலுரித்துக் காட்டியது. பின்பு, பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி 'அசுரன்' படத்தை இயக்கினார். தனுஷ் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, வசூலையும் அள்ளியது.

இதனால் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் மறைந்த நா.முத்துக்குமாரின் கவிதையை வைத்து உருவாக்கிய கதையில் சூரியை நாயகனாக நடிக்க வைக்க வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார்.

ஆனால், தற்போது அந்தத் திட்டத்தை மாற்றிவிட்டார். மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி நாவலை மையமாக வைத்துப் படம் இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்குச் செல்பவர்களின் உணர்வூபூர்வமான ஆவணமாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்நாவலை திரைக்கதை ஆக்கியுள்ள வெற்றிமாறன் ஓமன், கத்தார், சவுதி ஆகிய அரபு நாடுகளில் படமாக்க உள்ளார்.

வெற்றிமாறன் வெளிநாட்டில் படமாக்கும் முதல் படமாக சூரி படம் அமைந்துள்ளது. சூரி படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

SCROLL FOR NEXT