தமிழ் சினிமா

இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான கதை 'சினம்': அருண் விஜய்

செய்திப்பிரிவு

இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான கதை 'சினம்' என்று தனது ட்விட்டர் பதிவில் அருண் விஜய் தெரிவித்துள்ளார்

'மாஃபியா' படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு 'சினம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினார் அருண் விஜய். ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கி வரும் இந்தப் படத்தை மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய் தந்தை விஜயகுமாரே தயாரித்து வருகிறார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து விட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் "’சினம்’ படப்பிடிப்பு முடிந்தது. 6 மாதங்களாக இந்த குழுவோடு பணிபுரிந்தது மிகவும் அற்புதமான அனுபவம். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் அருண் விஜய். அவருக்கு நாயகியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார். ஷபீர் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'சினம்' படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'அக்னிச் சிறகுகள்' படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் அருண் விஜய்

SCROLL FOR NEXT