'துப்பறிவாளன் 2' படத்தில் மீண்டும் இணைந்த விஷால் - மிஷ்கின் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகியுள்ளார்.
விஷால் - மிஷ்கின் கூட்டணி முதலில் இணைந்த படம் 'துப்பறிவாளன்'. அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரவேற்பால் மீண்டும் விஷால் - மிஷ்கின் கூட்டணி இணைந்துள்ளது.
'துப்பறிவாளன்' படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா ஆகியோர் நடிக்க 40 நாட்கள் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் படமாக்கப்பட்ட வேண்டிய காட்சிகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வந்தது,
இந்த தருணத்தில்தான் விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'சைக்கோ' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் 'துப்பறிவாளன் 2' படத்துக்கு மிஷ்கின் அதிக சம்பளம் கேட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாகக் கேட்டதற்கு, மிஷ்கின் தரப்பிலிருந்து யாருமே பதிலளிக்கவில்லை.
பணப் பிரச்சினையால் விஷால் தரப்பால் 'துப்பறிவாளன் 2’ படத்தை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'சக்ரா' படத்தை முடித்து வெளியிட்டுவிட்டு, 'துப்பறிவாளன் 2' பண்ணலாம் என்பதற்கு விஷால் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் 'துப்பறிவாளன் 2' பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகியுள்ளார்.
இதற்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளை விஷாலே இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை விஷால் - மிஷ்கின் இருவருமே கூறவில்லை.