டப்பிங் யூனியன் தேர்தலில் சின்மயி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், போட்டியின்றி ராதாரவி தலைவராகத் தேர்வானார்.
2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்குத் தலைவராக இருந்து வருகிறார் ராதாரவி. அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், மீண்டும் தேர்தல் நடத்தத் திட்டமிட்டார்கள். இதற்கான மனுத்தாக்கல் தொடங்கப்பட்டது.
இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ராதாரவி மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட, சின்மயி மனுத்தாக்கல் செய்தார். தன்னை சங்கத்திலிருந்து நீக்கியது தொடர்பாக சின்மயி, ராதாரவியுடன் கடும் பனிப்போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தனது நீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கித்தான் டப்பிங் யூனியன் தேர்தலில் மனுத்தாக்கலே செய்தார் சின்மயி. ஆனாலும், இந்தத் தேர்தலில் சின்மயி மனு நிராகரிக்கப்பட்டு, தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ராதாரவி.
தனது மனு நிராகரிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில், "ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். எனது போட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சங்கத்தில் உறுப்பினராக எனக்கு முழு உரிமை இருக்கிறது என இடைக்கால உத்தரவையும் மீறி இது நடந்திருக்கிறது. நான் உறுப்பினர் என நீதிமன்றம் சொல்லியும் நான் உறுப்பினர் இல்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி ரவி எப்படி முடிவெடுத்தார் என்பது எனக்குப் புரியவில்லை.
தேர்தல் அதிகாரி என்று ஒருவரை நியமித்ததே தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் நான் டப்பிங் சங்கத்தில் உறுப்பினர் இல்லை எனத் தேர்தல் அதிகாரிகள் முடிவெடுத்தது யாருடைய உத்தரவின் அடிப்படையில்? ராதாரவியின் உத்தரவா? எப்படியோ நான் இதை சட்டரீதியாக எடுத்துச் செல்கிறேன். என்ன சொன்னாலும் செய்தாலும் ராதாரவி போட்டியிட்டுதான் நிற்க வேண்டும். ராமராஜ்யம் அணி அதற்காகத்தான் நிற்கிறது" என்று தெரிவித்துள்ளார் சின்மயி.