டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து சின்மயி போட்டியிடுகிறார்.
2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்குத் தலைவராக இருந்து வருகிறார் ராதாரவி. அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறையும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார்.
இதனிடையே, இந்தச் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியது தொடர்பாக ராதாரவி மற்றும் சின்மயி இருவருக்குமே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக சின்மயி களமிறங்கியுள்ளார்.
இன்று (ஜனவரி 30) காலை டப்பிங் யூனியனுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய சின்மயி வந்தார். அப்போது ராதாரவியின் ஆதரவாளர்கள் அவரை உள்ளே விட மறுத்து ஆவேசமாகப் பேசினார்கள். அங்கிருந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சின்மயி.
அப்போது சின்மயி பேசுகையில், "2018-ம் ஆண்டு எந்தவித விளக்கமும் இல்லாமல் என்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கினார்கள். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். உறுப்பினராக இருப்பதற்கு அத்தனை உரிமைகளும் எனக்கு இருப்பதாகத் தீர்ப்பு வழங்கினார்கள்.
சில நாட்களுக்கு முன்பு டப்பிங் யூனியன் தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டார்கள். அதில் என்னுடைய பெயரை வேண்டுமென்றே நீக்கியிருந்தார்கள். அதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு. இதைத் தொடர்ந்து நீதிபதியிடம் பேசி இன்றைக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தேன். ஏற்கெனவே ராமராஜ்யம் என்ற அணியினர் டப்பிங் யூனியன் வளர்ச்சிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் கேள்வி கேட்டாலே, நீக்கிவிடுவோம் என்ற அராஜகப் போக்கைத் தான் கையாண்டுள்ளனர். டப்பிங் யூனியனுடைய பணத்தை வைத்தே வழக்குத் தொடர்கிறார்கள். இங்கு நடப்பது தவறுதான்" என்று பேசினார் சின்மயி.