தமிழ் சினிமா

சமூக வலைதளத்துக்கு அடிமையானால் வளரமாட்டீர்கள்: அமீர் 

செய்திப்பிரிவு

சமூக வலைதளத்துக்கு அடிமையானால் வளரமாட்டீர்கள் என்று வளரும் நடிகர்களுக்கு அமீர் ஆலோசனை வழங்கினார்.

அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாயநதி'. அபி சரவணன், வெண்பா, 'ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை முகில் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பவதாரிணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 20) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினரோடு இசையமைப்பாளர் யுவன், இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சமூக சேவை செய்யும் வளரும் நடிகர்களுக்கு அமீர் தனது பேச்சில் ஆலோசனை வழங்கினார்.

இது தொடர்பாக தன் பேச்சில் அமீர், "வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது அவர்களுக்கு நல்லதல்ல. அது உங்களுக்கான தடை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழல் ரொம்பவே சிக்கலானது. ஆகையால் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு கலைஞனக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். ஆனால், அரசுக்கு எதிராக இருக்கக் கூடாது. சினிமா என்பது முழுக்க வியாபாரம்தான். இங்கு வெற்றிதான் பேசும். உங்களுடைய சமூக அக்கறையைப் பற்றி சமூக வலைதளத்தில் எழுதி பாராட்டுவார்கள். அதைப் போல் ஒரு ஏமாற்று வேலை எதுவுமே கிடையாது. அதற்கு நீங்கள் அடிமையாகி பதில் சொல்லத் தொடங்கினால், வளரமாட்டீர்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். எனக்கு ட்விட்டர், முகநூல் எதுவுமே கிடையாது. தேவையுமில்லை" என்று பேசினார் அமீர்.

SCROLL FOR NEXT