'குருதி ஆட்டம்' படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்.
'8 தோட்டாக்கள்' படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீகணேஷ். ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தின் மீதிருந்த அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டு, தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதைக்களம் குறித்து ஸ்ரீகணேஷ் கூறுகையில், "ரசிகர்களுக்குக் கதையின் கரு இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது என்பதை உணர்த்தவே ஃபர்ஸ்ட் லுக் அவ்வாறு வடிவமைக்கப்பட்டது.
'குருதி ஆட்டம்' படம் ஒரு விபத்துக்குப் பிறகு நாயகனுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தைக் கூறுவதாகும். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருந்தாலும் மிக அழுத்தமான சென்டிமென்ட்டும் இருக்கும். இதனைச் சுற்றியே மொத்தக் கதையும் அமைக்கப்பட்டிருக்கும்
சில தவிர்க்க முடியாத காரணங்களினால் படப்பிடிப்பு இடையில் தடைப்பட்டிருந்தாலும் இப்போது அனைத்துத் தடைகளும் நீங்கி, இம்மாத இறுதியில் மதுரையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீகணேஷ்.