தமிழ் சினிமா

நயன்தாரா ஓகே.. த்ரிஷாவுக்காக காத்திருக்கிறோம்!

செய்திப்பிரிவு

'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படக்குழுவிற்கு தனது பெயரை உபயோகப்படுத்துவதற்கு, எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று நயன் தாரா கூறியிருக்கிறார்.

'பென்சில்' படத்தில் நாயகனாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், அப்படத்தினைத் தொடர்ந்து 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' என்ற படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார்.

நடிகர், நடிகைகளின் பெயர்களை படத்தின் பெயராக வைக்கும் போது, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் தலைப்பை பதிவு செய்யும் போது த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரிடமும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் ஆதிக், நயன்தாராவைச் சந்தித்து முழுக்கதையையும் கூற, அவரும் 'தாராளமாக எனது பெயரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார். இன்னும் சில நாட்களில் த்ரிஷாவையும் சந்தித்து தடையில்லா சான்றிதழ் பெறத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இருவரிடமும் தடையில்லா சான்றிதழ் பெற்றவுடன், பெயரை பதிவு செய்து படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் நாயகன் மற்றும் இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

படத்தின் நாயகியாக பிரபு சாலமன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் நடித்து வரும் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT