தமிழ் சினிமா

சர்ச்சைக்குள்ளான வசனத்தை நீக்கியது 'தர்பார்' படக்குழு

செய்திப்பிரிவு

'தர்பார்' படத்தில் இடம் பெற்ற வசனம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதனை நீக்கியுள்ளது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் நேற்று (ஜனவரி 9) வெளியானது. சர்வதேச அளவில் 7,000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க உள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் ஒரு காட்சியில், ‘பணம் இருந்தால் கைதியும் ஷாப்பிங் போகலாம்; தென்னிந்தியாவில் கூட ஒரு கைதி இப்படி அப்பப்போ வெளியே போய்ட்டு வருவாங்களாமே!?’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த வசனம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைக் குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இதைக் கண்டித்துள்ளார். இக்காட்சியை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என படக்குழுவினரை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், "ரஜினிகாந்தும், அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இப்படி ஒரு வசனத்தை வைக்க அனுமதித்திருக்கக் கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவார்கள் என நம்புகிறோம். இல்லையேல், அவர்கள் மீதும் சட்டப்படி வழக்குத் தொடரப்படும்" என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார் ராஜா செந்தூர் பாண்டியன்.

இது தொடர் விவாதமாகி வந்த நிலையில், 'தர்பார்' படக்குழுவினர் அந்த வசனத்தைப் படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், "எங்களின் 'தர்பார்' திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அதைப் படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது லைகா நிறுவனம்.

SCROLL FOR NEXT