அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநருக்கு டெங்கு காய்ச்சல் வந்தபோதும்கூட படப்பிடிப்பை நிறுத்தாமல், தொடர்ந்து படம் பிடித்துள்ளனர்.
எனவே, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. ஆனால், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘மாஃபியா’ படத்தின் இரண்டாவது டீஸரில், 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியீடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி மாற்றத்துக்கான காரணம் என்னவெனத் தெரியவில்லை.
கார்த்திக் நரேன் இரண்டாவதாக இயக்கிய ‘நரகாசூரன்’ படம், சில பிரச்சினைகளால் இன்னும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.